மாதேஷும் ஆதீரனும் கிளம்பி சென்றது நேராக மாதேஷின் வீட்டிற்கு தான். வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் வீடு முழுக்க நெய் மணம் வீசியது.
“வாவ்… என்ன வாசனை… மாம்… மாம்…” என்று கூறிக்கொண்டே ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்தான் மாதேஷ். அவனை தொடர்ந்து ஆதீரனும் உள்ளே நுழைந்தான்.
“ஜானு… ஜானு… எங்க இருக்க…” என்று கூறிக்கொண்டே சமையலறை நோக்கி சென்றான் மாதேஷ்.
ஆதீரனோ வரவேற்பறையிலேயே அமர்ந்து விட்டான்.
“டேய் எதுக்குடா இப்படி கத்திட்டே வர்ற?” என்று மாதேஷ் சமையலறையில் நுழையும் முன்பே எதிர்ப்பட்டார் மாதேஷின் அன்னை ஜானகி.
“ஜானு… என்ன ஸ்வீட் செஞ்ச… வீடெல்லாம் நெய் மணக்குது… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..” என்று ஆர்வமிகுதியில் அடுக்கடுக்காக கேட்டான்.
“முதல்ல இத சாப்பிடு… ரீஷன் எல்லாம் சாப்பிட்ட பின்னாடி சொல்றேன்…” என்று தட்டில் இருந்த இரண்டு கிண்ணங்களை கொடுத்தார். ஒன்றில் சர்க்கரை பொங்கலும் மற்றொன்றில் கேசரியும் கொடுத்தார். இரண்டையும் இரண்டு கைகளில் வாங்கி கொண்ட மாதேஷோ ஆதீரனின் அருகில் சென்று அமர்ந்தான்.
“மாம்… நீங்க ஆதிரன மறந்துட்டீங்க அவனும் வந்திருக்கான்.” என்று கூற பதிலின்றி மறுபடியும் சமையலறையில் நுழைந்த ஜானகியோ மற்றொரு சிரிய கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு கொண்டு வந்து ஆதீரனிடம் நீட்டினார்.
அவனோ சிரிப்போடு அவ்ர் கொடுத்ததை வாங்கி கொண்டான்.
தனக்கு கொடுத்ததை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவனது கிண்ணத்தை பார்த்தான் மாதேஷ்.
“ஐய்.. பால் கொலுக்கட்டை… மாம்… இதென்ன ஓரவஞ்சனை… அவனுக்கு மட்டும் பால் கொழுக்கட்டை எனக்கு வெறும் கேசரி பொங்கலா?”
“டேய் உனக்கும் தான் எடுத்தேன். ஆனா உனக்கு முதல்ல நெய் வாசம் வருதுன்னு சொன்ன… அதான் உனக்கு இதெல்லாம் கொடுத்தேன். ஆதீக்கு எப்பவும் பால் பாயாசம்னா உயிர் அதனால அவனுக்கு அது கொடுத்தேன். “ என்று தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தார்.
“அதெப்படி… எனக்கும் பால் பாயாசம் கொடுங்க… அதுவும் எனக்கு பிடிச்சது தான்…”
“டேய் இந்த உலகத்துல உனக்கு பிடிக்காத ஸ்வீட்னு ஏதாவது இருக்கா என்ன? முதல்ல இத சாப்பிடுடா… அப்புறம் தர்ரேன்…” என்றார்.
அவனோ அவரை முறைத்து கொண்டே இருந்தான்.
இவர்களின் பேச்சுக்களை எல்லாம் கவனித்து கொண்டே தனக்கு கொடுத்ததை உண்டு முடித்தான் ஆதீரன்.
“ஜானுமா… இப்ப சொல்லுங்க… என்ன விஷேஷம் இன்னைக்கு… உங்க கல்யாண நாளோ இல்ல பிறந்த நாளோ எதுவுமே இல்லையே…” என்றான் ஆதீரன்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல ஆதி. ஏதோ இன்னைக்கு நல்ல செய்தி நீங்க சொல்ல போறீங்கனு தோணுச்சு… அதான் செஞ்சேன். இண்டர்வியூ என்ன ஆச்சு… ரெண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில வேலை கிடைச்சுருச்சல்ல…” என்றார் ஆர்வமாக.
ஏனோ அவரது பாசத்தில் நெகிழ்ந்தான் ஆதீ. அவனுடைய குடும்பத்தில் வெறும் பணத்திற்காக மட்டுமே தனக்கு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டனர். அதுவும் சில நிமிடங்களே. அதற்குள் ஒரு சண்டையை இழுத்து விட்டு அவனை வேதனை அடைய செய்திருந்தனர்.
ஆனால் இங்கோ அவனின் வருகைக்கு முன்பே இனிப்பை அதுவும் தனக்கு பிடித்தமான இனிப்பை செய்து வைத்து காத்திருக்கிறார் நண்பனின் அன்னை. இவர்களை போல் ஏன் எனக்கு மட்டும் அன்னை அமையவில்லை என்று இதற்கு முன்பு போல தற்பொழுதும் எண்னிக் கொண்டிருந்தான்.
“டேய்… மாம் கேட்கறாங்க நீ பதிலே சொல்லாம உட்கார்ந்து இருக்க…” என்றான் மாதேஷ்.
அவனுடைய வீட்டின் நினைவிலிருந்து வெளியே வந்தவன் “கிடைச்சுருச்சு ஜானுமா… சாரி ஜானுமா முதல்லயே கூப்பிட்டு சொல்லி இருக்கனும்…” என்றான் குற்ற உணர்ச்சியில்.
“இதிலென்ன இருக்கு ஆதி… எப்படியோ என் உள்மனசு சொன்னது பொய்க்கலையே… உன்னோட நல்ல மனசுக்கும், இவ்வளவு நாள் நீ பட்ட கஷ்டத்துக்கும் இனிமேலாவது உன் வாழ்க்கையில நல்லது நடந்தா சரிதான்.” என்று கூறி பெருமூச்சொன்று விட்டார்.
“அதுசரி… இந்த நல்ல விசயத்தை உன் அம்மாகிட்ட சொன்னயா? அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்களே…”
“ஆமா… ஆமா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… வேலை கிடைச்சதுக்காக இல்ல… மாசமாசம் இனி பணம் கிடைக்குமே அதுக்காக சந்தோஷப்பட்டாங்க. அனிதா என்னன்ன எனக்கு நகை எல்லாம் எடுத்து கல்யாணம் பண்ணி வச்சுருவயல்லனு கேட்கறா… இவன் தம்பி என்னனா உனக்கெல்லாம் யாரு வேலை கொடுத்தாங்கனு கிண்டல் பண்றான். எனக்கு சரியான கோபம் வந்துச்சு.. ஆனா இவன் தான் ஏதும் பேச வேண்டாம்னு தடுத்துட்டான்.” என்று அப்பொழுதும் அந்த நிகழ்வை நினைத்து கோபம் கொண்டான் மாதேஷ்.
“விடுடா… அவங்க தான் எப்பவுமே அப்படிதானு தெரியுமல்ல…” என்று இப்பொழுது அவர்களுக்கு ஆதரவாகவே பேசினான் ஆதி.
“போடா…” என்று கத்தினான் மாதேஷ்.
“மாது… என்ன தான் இருந்தாலும் அது அவனோட குடும்பம்,,, அவனோட தங்கச்சி, தம்பி… அவங்க தானே அப்படி பேசினாங்க… இதெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாது. நீரடிச்சு நீர் விலகாது… நாளைக்கு ஏதாவதுனா ஆதிக்கு துணையா இருக்க போறது அவங்க எல்லாம் தான்.”
“அப்ப நீங்க எனக்காக நிற்க மாட்டீங்களாமா…” என்றான் சட்டென்று ஆதி.
“உனக்காக நாங்க எப்பவும் இருப்போம்… ஆனாலும் அது உன் குடும்பம் இல்லையா ஆதி. அவங்களை எங்கேயும் விட்டுட கூடாது…” என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தார் பிரகாஷ் மாதேஷின் தந்தை.
“அப்பா…” என்று மனமகிழ்ந்து எழுந்து நின்றான் ஆதீ…
“இப்ப எதுக்கு எழுந்து நிற்கற… உட்கார்…” என்று அமர்ந்து தனக்கு அருகிலேயே அமர வைத்து கொண்டார் ஆதியை.
“வேலை கிடைச்சுருச்சா? என்ன வேலை? எந்த கம்பெனி?” என்று கேட்டார்.
அனைத்திற்கும் பதிலளித்தான் ஆதி.
“இவனையும் சிஏ படிக்க சொன்னதுக்கு படிக்க மாட்டேனு சொல்லிட்டான். இவன மேல படிக்க சொல்லி நீயாவது சொல்லு ஆதி…” என்று மூவருக்கும் தேநீர் எடுத்து கொண்டு வந்தார் ஜானகி.
“கண்டிப்பா இந்த வருஷம் சேர்த்து விட்டுடலாம் நீங்க கவலை படாதீங்கமா…” என்றான் ஆதி.
“போடா… என்னால எல்லாம் படிக்க முடியாது. யூஜி படிச்சதே பெரிய விசயம் .இத வச்சு காலம் தள்ளினா போதும் எனக்கு…”
“பார்த்தயா… இதெல்லாம் எங்க உருப்பட போகுது..” என்று தலையிலடித்து கொண்டார் பிரகாஷ்.
அவரை முறைத்த மாதேஷோ அதான் உங்க தத்து புத்திரன் நல்லா படிச்சுட்டானே… அப்புறம் என்ன ஆள விடுங்க என்னை… முதல்ல கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்க… இந்நேரம் கல்யாணம் பண்ணி இருந்தேனா என் பையனே ஸ்கூலுக்கு போய்ட்டு இருந்திருப்பான். இப்ப போய் என்னைய படிக்க சொல்லிட்டு இருக்கீங்க…” என்று கூறினான்.
“நீ எம்பிஏ.. இல்ல எம்.காம் படிச்சீனா மட்டும் தான் கல்யாணம்… இல்லனா கல்யாணமே இல்ல…” என்று பெரிய குண்டை தூக்கி போட்டார் ஜானகி…
“ஜானு என்ன இது… இப்படி சொல்லிட்ட… இதெல்லாம் சரியில்ல.. அப்புறம் நம்ம குடும்பம் வம்சம் விருத்தி ஆகாமயே போய்டும். உனக்கு பேரனோ பேத்தியோ பார்க்கனும்னு ஆசை இல்லையா? அத விட்டுட்டு என்னைய படிக்க சொல்லிட்டு இருக்க… இதெல்லாம் கொடுமை தெரியுமா?”
“நீ என்ன சொன்னாலும் சரி… நீ மேல பிஜி ஏதாவது படிச்சா தான் உனக்கு கல்யாணம்…”
“மம்மி… நோ… எனக்கு நெஞ்சு வழியே வந்துரும் போல இருக்கு…” என்று கத்தினான் மாதேஷ். ஆனால் அவரோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தார்.
“மம்மி… மம்மி…” என்று அவர் பின்னாலயே ஓடினான் மாதேஷ்.
அவர்கள் இருவரையும் கண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தனர் ஆதியும், பிரகாஷும்.
பிரகாஷ் ஆதியை பார்த்து “ஏப்படியோ ஆதி. இதுக்கு முன்னாடி நீ வேலை தேட போன இடமெல்லாம் உனக்கு விபத்து நடந்ததை வச்சே உன்னை வேலைக்கு வேண்டாம்னு சொன்னாங்க… பரவாயில்ல இந்த இடத்திலயாவது உன் படிப்புக்கு தகுந்த மாதிரி வேலை கிடைச்சுருச்சே… ரொம்ப சந்தோஷம் பா…” என்றார் ஆதியின் தோள்களை தட்டி கொண்டே.
“ப்பா… ஒரு மாசம் வேலை கொடுத்து நான் எப்படி செய்யறேனு பார்த்து தான் ஒகே சொல்லுவேனு சொல்லிட்டாங்க..”
“ஆதி… ஒரு வேலையே எடுத்துட்டா எப்படி டெடிகேஷனோட வேலை செய்வேனு எனக்கு தெரியாதா? உனக்கு வேலை கொடுத்தா தானே நீ எப்படி செய்வேனு மத்தவங்களுக்கு தெரியும் அந்த வாய்ப்பு யாருமே கொடுக்காத பட்சத்துல இவங்க கொடுத்திருக்காங்க… சோ கண்டிப்பா உன்னால முடியும் நீ உன் வாழ்க்கையில நிறைய முன்னேறி சாதிப்பா… பார்த்துட்டே இரு…” என்று அவனது தோள்களை தட்டி ஊக்கம் கொடுத்தார்.
ஆதிக்கோ அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் நீலாம்பரியையே நினைவு படுத்தியது. வாய்ப்பு கொடுத்தா தானே தெரியும் அவர் நல்லா வேலை செய்வாரா இல்லையானு… என்று அவள் கூறிய ஒற்ற வார்த்தையில் தானே அவனுக்கு வேலையே கிடைத்தது.
அவள் கூறிய வார்த்தையில் தொடங்கிய அவள் நினைவுகள் அவளை அணுஅணுவாய் ரசித்தது முதல் அவளுக்கு திருமணமாகி குழந்தை மற்றும் இன்னொரு இளைஞனுடன்சிரித்து பேசியது வரை யாவும் நினைவுக்கு வந்தது. அதில் அவனது முகம் கசங்கி மனதின் கலக்கத்தை எடுத்து காட்டியது.
அதை கவனிக்காத பிரகாஷோ மேலும் மேலும் ஏதோ கூறி கொண்டே சென்றார்.
“ஐ…. சக்ஸஸ்…” என்று கத்தி கொண்டே வந்த மாதேஷின் உற்சாகமான கத்தலில் தான் நினைவுலகத்திற்கு திரும்பினான் ஆதி.
“டேய்… எதுக்கு இப்ப கத்திட்டு வர்ற?”
“ம்.. எனக்கு இந்த வருஷமே கல்யாணம்னு அம்மா சொல்லிட்டாங்க..”
“அவ சொன்னா? நடந்திருமா? அதுக்கு பார்க்க போற பொண்ணு சம்மதிக்கனுமே…”
“அதெல்லாம் சம்மதிப்பா… நீங்க ஒழுங்கா எனக்கு பொண்ணு பார்க்கற வழியை பாருங்க…”
“ஆதி… பெண் பாவம் பொல்லாதுனு சொல்லுவாங்கள்ல…”
“ஆமாம் பா… ரொம்ப பாவம்… அதுவும் இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அந்த பொண்ணுக்கு நாம செய்யற மாபாதகம் அது… எத்தனை பிறவி எடுத்தாலும் அந்த சாபம் நம்மள விட்டு போகாது..” என்று மாதேஷை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டே கூறினான் ஆதி.
“டேய்… கொல்ல போறேன் பாரு உன்ன… என்ன ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்களா? டாடி… இவன் தான் நண்பன் என்னை கலாய்க்கரானு பார்த்தா நீங்களும் சேர்ந்து என்னை கேலி பண்றீங்க…”
“டேய்… முதல்ல உன்னை கேலி பண்ண ஆரம்பிச்சதே அப்பா தான். ஆனா நீ அவர்கிட்டயே நியாயம் கேட்கற பாரு…” என்று ஆதி சிரித்து கொண்டே கூறினான்.
தனது தந்தையை பார்த்து முறைத்தான் மாதேஷ்.
“ஆதி அவனே மறந்ததை நீ நியாபகப்படுத்தி சொல்லிட்டயே… இப்ப இவன் பேசுறத பார்த்தா இந்த மாதிரி ஒருத்தனுக்காக இன்னும் பொண்ணு பார்க்கனுமானு சந்தேகம் வலுவா வருது.” என்று மீண்டும் வெகு சிரத்தையாக கூறினார் பிரகாஷ்.
அதை கேட்ட ஆதியோ கண்களில் தண்ணீர் வரும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிக்க மாதேஷோ கண்களில் கொலை வெறியுடன் அருகே அழகுக்காக வைத்திருந்த பீங்கானால் ஆன பூச்சாடியை எடுத்து அடிக்க ஓங்க அவரோ தலைக்கு மேல் கை வைத்து “ஐயோ ஜானு…” என்று கூறினார்.
“நோ.. நோ… மை மம்மி பாவம்…” என்று கூறியவன் நீள் இருக்கையில் வைத்திருந்த சிறிய குஷனை எடுத்து அவர் மேல் போட்டான்.
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த ஆதிக்கோ மனது இளகியது. அவன் வீட்டில் இருக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை விட இங்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் அவன்.
இவர்களது சம்பாஷனைகளை கேட்டு கொண்டே வெளியே வந்த ஜானகியோ “டேய் மகனே… என் தாலிக்கு பங்கம் வராம என்ன வேணா செஞ்சுக்க நீ…” என்று கூறினார்.
“அடிப்பாவி… நீயெல்லாம் கட்டின பொண்டாட்டியா? தாலிக்கு பங்கம் வராம என்னவேணா செஞ்சுக்கோனு சொல்ற? அப்ப என்னை விட உனக்கு உன் புள்ள தான் பெரிசா போய்ட்டான் இல்ல..” என்று போலியாக கோபப்பட்டார் பிரகாஷ்.
“நான் எப்ப அப்படி சொன்னேன். என் தாலிக்கு பங்கம் வாராமனு சொன்னதே உங்க மேல இருக்கற அக்கறையில தானே…”
“ஆதி… நீயாவது எனக்கு துணையா இரு… அம்மாவும் மகனும் எப்ப வேணாலும் உயிர மட்டும் மிச்சம் வச்சுட்டு என்ன வேணா பண்ண ரெடியா இருக்காங்க… நீ கொஞ்சம் எனக்கு எப்பவும் துணைக்கு இருப்பா…”
அதை கேட்ட ஆதீரனோ “அப்பா… நான் எப்பவும் உங்க கட்சி தான்.” என்றான்.
“ஆதி… அம்மா உனக்கு பால் கொழுக்கட்டை எல்லாம் செஞ்சு தந்துருக்கேன்…”
“ஜானுமா… நீங்க எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தான்…”
“ஆதி அதுக்குள்ள கட்சி மாறிட்ட…”
“ப்பா… நீங்க ரெண்டு பேருமே எனக்கு ஸ்பெஷல் தான். ஒகேவா… இருந்தாலும் அம்மா ஒரு படி மேல…”
“அப்படி சொல்லுடா என் ஆதி குட்டி… இரு உனக்கு பிடிச்ச பூரி செய்யறேன்…” என்று சமையலறை நோக்கி சென்றார்.
“ஆதி.. இதெல்லாம் ஓவர் டா… பால் கொழுக்கட்டைக்காக அப்பாவ விட்டு கொடுத்துட்டயா?”
அவர் காதருகே குனிந்து “அப்பா… எல்லாம் சும்மா சொன்னேன்… அப்படி சொல்லலைனா நாளைல இருந்து அம்மா எனக்கு செஞ்சு கொடுக்க மாட்டாங்க…” என்றான்.
இவ்வளவு களேபரத்திலும் ஒருவன் பால் கொழுக்கட்டையை மும்முரமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
இவர்கள் பேச்சை கேட்டவனோ “அம்மா… இங்க ஒருத்தன் உனக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கான்… நீ அவனுக்காக பூரி செய்யறயா?” என்று கத்தினான்.
அதை கேட்ட பிரகாஷோ… “ஆதி… வேலை கிடைச்சதுக்கு இன்னைக்கு நான் உனக்கு ட்ரீட் வைக்கறேன்… நீயும் நானும் மட்டும் போகலாமா?” என்றார் மாதேஷை பார்த்து கொண்டே.
“ஹா…. சூப்பர்பா… நான் ரெடி…” என்று ஆதியும் கூற.
ட்ரீட் என்று கூறியதுமே வாயிலிருந்த அந்த பால் கொழுக்கட்டை விழுந்தது கூட தெரியாமல் கண்கள் மின்ன அவர்களை பார்த்து கொண்டிருந்தவனோ “அப்ப எனக்கு… நான்..” என்றான்.
“உனக்கு தான் உங்க அம்மா பூரி சுட்டு வச்சுருக்காலே… போய் சாப்பிடு…”
“அதெல்லாம் முடியாது… நானும் வருவேன்.”
“அப்ப ஒழுங்கா எங்கள உங்க அம்மாகிட்ட போட்டு கொடுக்கறத நிறுத்து…”
“டபுள் ஒகே… இப்பவே கிளம்பலாமா…”
“டேய் மகனே… உங்க அம்மா உங்களுக்காக தான் சமைக்க போயிருக்கா…”
“டாடி… பூரி சாப்பிட்டு யாராவது தண்ணி அடிப்பாங்களா? வெளிய போய் சாப்பிடலாம்…”
“டேய்… உங்க அம்மாகிட்ட என்னை அடி வாங்க வைக்கறதுனே முடிவு பண்ணிட்டயா?”
“அப்ப நீங்க வர வேண்டாம்… நாங்க மட்டும் போறோம்… செலவுக்கு மட்டும் காசு கொடுத்திருங்க…”
“தர்ரேன்… ட்ரீட்னா வெறும் சாப்பாடு மட்டும் தான்.. மத்தபடி எல்லாம் ஏதும் இருக்க கூடாது…”
“டாடி… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீங்க காசு கொடுங்க…”
“ஆதி… நீ குடிக்க மாட்டேனு தெரியும்… உன்ன நம்பி தான் அனுப்பி வைக்கறேன்… பார்த்துக்கோ…” என்று தனது பர்ஸை எடுத்து இரண்டாயிரம் கொடுத்தார்.
அதை வாங்கி கொண்ட மாதேஷோ… “டாடி என்ன இது வெறும் இரண்டாயிரம்… இது எங்க பத்தும்…” என்றான்.
“ரெண்டு பேருக்கு இது போதும்… போங்க…” என்றார்.
“சரி டாடி… நாங்க கிளம்புறோம்… மம்மிய சமாளிச்சுக்கோங்க…” என்று மாதேஷ் வண்டி சாவியை எடுக்க போனான்.
“டேய்.. அம்மாகிட்ட சொல்லிட்டு போகலாம்… இல்லனா கோவிச்சுக்குவாங்க… இல்ல அவங்களையும் கூட்டிட்டு போகலாம்..” என்றான் ஆதி.
“என்னது.. அம்மாவ கூட்டிட்டு போறதா… கதை கெட்டுச்சு போ…” என்றவன் அவனது கைகளை பிடித்து இழுத்து கொண்டு சென்றான்.
அவர்கள் வெளியேறிய பிறகு “ஜானு டார்லிங்…” என்று கூறிக்கொண்டே… பிரகாஷ் சமையலறையில் நுழைந்தார்.
அதை பார்த்த இருவரும் சிரித்து கொண்டே வெளியேற “பார்த்தயா… டாடி மம்மிகூட ரொமான்ஸ் பண்ண நம்மள அனுப்பிட்டாரு… வாடா… சும்மா…” என்று இருவரும் கிளம்பினர்.