உன் நிழல் நான் தொட ep 10

அத்தியாயம் 10 (1)

ஜூலை 17 இரவு 12 மணி

நடு இரவில் தன் அருகில் இருந்த போன் அலற, தூக்க கலக்கத்தில் போனை எடுத்த ரத்னா, யார் என்று பார்க்காமல் எடுத்து காதில் வைக்க, மறுமுனையில் ஸ்டெல்லா, “Happy Birthday my sweet heart.”

தோழியின் பிறந்த நாள் வாழ்த்தை கவனிக்காமல் தூக்க கலக்கத்தில் “ம்ம்” என்று கூறிவிட்டு தூக்கத்தை தொடர, பதில் இல்லாமல் போனதை கவனித்த ஸ்டெல்லா, ரத்னா ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை புரிந்துகொண்டு அழைப்பைத் துண்டிக்க, அதற்காகவே காத்திருந்தது போல ரத்னாவின் போன் மீண்டும் அலற, இம்முறை தூக்கம் முழுவதும் கலைந்த ரத்னா யார் என்று பார்க்க, அதில் பிரபுவின் பெயர் ஒளிர்வதை பார்த்து, 

“எரும மாடு, உனக்கு போன் பண்றதுக்கு வேற நேரம் கிடைக்கலை. பேய் வாக்கிங் போற நேரத்துல எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்க லூசு. நீ என் கையில் மட்டும் கிடைச்ச…” போனை எடுத்து ரத்னாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத பிரபுவும், 

“யாரு நானா எருமமாடு? நானா லூசு? எல்லாம் நீதான். பிறந்தநாள் அதுவுமா போன் பண்ணி வாழ்த்து சொன்னா சந்தோஷப்படுவேன்னு நினைச்சு போன் பண்ணுனா, என்ன இப்படியா திட்டுவ?”

“வாழ்த்து சொல்றதுக்கு உனக்கு நேரங்காலம் இல்லையா?”

“உனக்கு போய் வாழ்த்து சொன்னேன் பாரு என் புத்தியை.”

“இல்லாத புத்தியை இப்போ எதுக்கு பேசிகிட்டு இருக்க?” அதற்குமேல் பிரபு என்ன பேசினான் என்பதை கவனிக்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டு, இம்முறை மறக்காமல் போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அன்று சனிக்கிழமை என்பதால் ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ்க்காக கிரவுண்டிற்கு செல்ல, அங்கே ரத்னாவிற்காக காத்திருந்த ஸ்டெல்லா, பிரபு, அஜீத் மூவரும் ஒரே நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட, கிரவுண்டில் இருந்த அனைத்து மாணவர்களும் ரத்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற என சிறிது நேரம் அந்த இடம் கலகலப்பாக இருந்தது. அதன்பிறகு பிரபு ரத்னாவிடம், 

“நைட் போன் பண்ணி உனக்கு விஷ் பண்ணா என்ன திட்டுற. இருந்தாலும் போகட்டும் இந்த பிரபுவுக்கு தாராள மனசு, அதனால்தான் நீ திட்டினால் கூட உனக்காக ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன்.” இடையில் பேச நினைத்த ரத்னாவை தடுத்து, 

“எனக்கு நல்லா தெரியும் நீ இப்போ என்ன சொல்ல போறேன்னு. கண்டிப்பா இது காசு கொடுத்து வாங்கின கிப்ட் இல்ல. எங்க அம்மா உனக்காக வீட்டிலேயே செஞ்ச பால் பாயாசம் தான். என்ன வேணுமா? வேண்டாமா?”

“அம்மா எனக்காக செஞ்சு கொடுத்தது, அதை எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். சீக்கிரம் குடு.” அதன்பிறகு ஸ்டெல்லா ரத்னாவிடம், 

“உனக்குத்தான் கனகாம்பர பூ ரொம்ப பிடிக்கும் தானே? அதான் உனக்கு புடிச்ச கனகாம்பர பூவையும், எனக்கு புடிச்ச மல்லிகை பூவையும் சேர்த்து கட்டிக் கொண்டு வந்திருக்கேன். திரும்பு வெச்சுடுறேன்.” என தான் கொண்டு வந்திருந்த பூவை ரத்னாவின் தலையில் வைத்து விட, அஜீத்தை பார்த்த ரத்னா, 

“பிரபு எனக்காக பாயாசம் கொண்டு வந்தான். ஸ்டெல்லா எனக்காக நிறைய பூ கொண்டு வந்து இருக்கா. நீ எனக்கு ஒண்ணுமே தரல.” அஜீத் தன் வழக்கமான சிரிப்புடன், 

“என்னோட கிப்ட் நீ பாக்கணும்னா அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா?”

“அப்படி என்ன கிப்ட்?”

“கிப்ட் பாக்குறதுக்கு முன்னாடி உங்க வீட்ல யாருக்காவது போன் பண்ணி உன் பிறந்தநாளுக்கு பிரெண்ட்ஸ் கூட வெளியிட போறேன்னு சொல்லிடு.” கிப்ட் என்னவென்று கூறாமல் வீட்டிற்கு போன் பண்ண கூறும் அஜித்தை ஒரு சின்னதாக முறைத்து பார்த்துவிட்டு தன் பெரியப்பாவிற்கு போன் செய்ய, அவர் அழைத்த ஏற்றதும் அஜீத் கூறியவற்றை கூற, பதிலுக்கு முத்துவேல், 

“யாரெல்லாம் போறீங்க?” 

“நான், ஸ்டெல்லா, பிரபு அப்புறம் அஜீத் நாலுபேர் பெரியப்பா.” 

“சரி போய்ட்டு 3 மணிக்கு முன்னே ஹாஸ்டலுக்கு வந்துடனும் சரியா.” 

“சரி பெரியப்பா சீக்கிரம் வந்து விடுவேன்.” பெரியப்பாவின் அனுமதி கிடைத்ததை அஜீத்திடம் கூற, அஜீத் ஸ்டெல்லாவிடம், 

“இஃப் யூ டோன்ட் மைன்ட் உன்னோட கார்ல போகலாமா? ஏன்னா எங்க ரெண்டு பேருகிட்டயும் பைக் தான் இருக்கு. அதுல போக வேண்டாம்னு நினைக்கிறேன்.”

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அஜீத். உன்கிட்ட லைசென்ஸ் இருக்குன்னா டிரைவரா வேணும்னா அனுப்பி விடுவோம்.” அதன்பிறகு அஜீத் அனைவரையும் அழைத்து சென்ற இடம் தியானலிங்கம் ஆலயம்.

உள்ளே சென்றதும் அந்த அமைதியான சூழ்நிலையில் மனதில் அனைத்து சஞ்சலங்களும் நீங்கி ஏதோ பரவச நிலையில் இருப்பது போல அனைவரும் உணர்ந்தனர். நேரம் சென்றது கூட தெரியாமல் அந்த சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்திருந்த ரத்னாவை அழைத்த அஜீத், 

“என்ன என்னோட கிப்ட் உனக்கு புடிச்சிருக்கா?”

“ரொம்ப புடிச்சிருக்கு. என்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எங்க ஊர்ல இருந்து தென்காசியில் இருக்க காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தான் போவோம். இன்னைக்கு அதே மாதிரி இந்த கோவிலுக்கு வந்தது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.”

“சரி சரி இதுக்கே அசந்துட்டா எப்படி, இன்னும் உனக்கு ஒரு கிப்ட் இருக்கு.”

தியானலிங்க ஆலயத்திலிருந்து புறப்பட்டு சரியாக அரை மணி நேரத்திற்கு பின்பு அஜீத் அழைத்துச் சென்ற இடத்தை பார்த்த ரத்னா மகிழ்ச்சியில் அருகிலிருந்த ஸ்டெல்லாவை கட்டிக்கொண்டு, 

“Thank you thank you thank you so much அஜீத்” என்று குழந்தை போல துள்ளிக் குதித்துக் கொண்டு இருக்க, தோழியின் சந்தோஷத்தைப் பார்த்து ஸ்டெல்லா அஜீத்திடம், 

“நானும் கோயம்புத்தூரில் தான் இருக்கேன், ஆனா இந்த இடத்துக்கு இதுவரைக்கும் வந்ததில்லை.” எனக்கூற அஜீத் ரத்னாவிடம், 

“எப்படி ரத்னா, தூரமாக இருந்து பாத்துக்கிட்டு இருக்க போறியா? இல்ல கிட்ட போய் பாக்க போறியா?” என அஜீத் கேட்ட அடுத்த நொடி ரத்னா ஸ்டெல்லாவை இழுத்துக்கொண்டு சென்று அருவி நீரில் குளித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேரத்திற்கு பின்பும் வெளியில் வர மறுத்த ரத்னாவை வலுக்கட்டாயமாக ஸ்டெல்லா இழுத்து வர, 

“அஜீத், இவ்வளவு நாளா இந்த ஊர்ல அருவி இருக்கிற விஷயம் எனக்கு தெரியாம போயிட்டு.” 

“தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணி இருப்ப?”

“தெரிஞ்சு இருந்தா இன்னைக்கு இங்க வரணும்னு நானே முடிவு பண்ணி இருப்பேன்.”

“ஏன்?”

“எனக்கு அருவியில் குளிக்கிறது ரொம்ப பிடிக்கும். பிறந்த நாளுக்கு குடும்பத்தோட கோவிலுக்கு போயிட்டு அருவிக்கு தான் போவேன்.”

“உனக்கு இந்த பிறந்த நாளுக்கும் எல்லாம் கிடைக்கும். சரி சொல்லு கோவை குற்றாலம் அனுபவத்தை.”

“சூப்பரா இருந்துச்சு. ஆனா எனக்கு இப்ப வயிறு பசிக்குது.”

“அதுக்கும் ஒரு வழி இருக்கு. நீ இப்படி எல்லாம் சொல்லுவேன்னு எனக்கு நல்லா தெரியும். அதான் வீட்டிலிருந்து வரும்போது அம்மா கிட்ட சொல்லி சாப்பாடு கொண்டு வந்துட்டேன்.”

அஜீத் கொண்டுவந்த உணவை உண்டு முடித்த பின்பு கோவை குற்றாலத்தின் அழகை சுத்தி பார்க்க, அதற்குள் இருவரின் உடையும் காய்ந்துவிட, ரத்னாவின் ஹாஸ்டல் நோக்கி வந்தனர். ஹாஸ்டல் வந்திறங்கிய ரத்னா தனக்காக தன் மொத்த குடும்பமும் காத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியில், 

“எல்லாரும் இன்னைக்கு வரேன்னு சொல்லவே இல்ல. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று கூறிவிட்டு அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அஜீத் புறம் திரும்பி, 

“நீ சொன்ன மாதிரியே என்னோட பதினெட்டாவது பிறந்த நாளுக்கு எல்லாமே எனக்கு கிடைச்சிடுச்சு.” என மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்க ரத்னாவின் பெரியப்பாவின் அருகில் வந்த அஜீத், 

“அங்கிள் நல்லா இருக்கீங்களா? என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்று கூறி முத்துவேலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவன் தலையில் கையை வைத்து, 

“அஜீத், இன்னைக்கு மாதிரி என்னைக்கும் எல்லா நாளும் ரொம்ப சந்தோஷமாய் இருக்கணும்.” என ஆசீர்வதிக்க, ரத்னா, 

“உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே தெரியுமா? ஏன் என்கிட்ட சொல்லல?” சிறு பிள்ளையின் பாவனையில் பேசிய ரத்னாவை பார்த்த ராதிகா, 

“நீங்க தான் என் சித்தியா?” 

“ராதிகா குட்டி நான் தான் உங்க சித்தி, இதுதான் உங்க தாத்தா, பாட்டி, இது பெரிய தாத்தா.” 

“நீங்க எல்லாரும் என்கிட்ட பேசுறீங்க. பெரிய தாத்தா மட்டும் என்கிட்ட பேசல.” சிறுகுழந்தையின் வருத்தத்தை புரிந்துகொண்டு ரத்னா ராதிகாவின் காதில், 

“அஜீத் அங்கிள் மாதிரி உங்க அப்பா அம்மாவையும் ஆசிர்வாதம் வாங்க சொல்லு. அப்படின்னா தான் பெரிய தாத்தாவும் உங்ககிட்ட பேசுவாங்க.” என கூற, ரத்னாவின் கையிலிருந்து இறங்கிய ராதிகா தன் தந்தையிடம் சென்று, 

“அப்பா, அந்த அங்கிள், சித்தி எல்லாரும் தாத்தா கிட்ட ஆசீர்வாதம் வாங்கினாங்க தானே. நீயும் அம்மாவும் மட்டும் ஏன் வாங்கல? போய் வாங்குங்க.” என்று கூறி தன் தாய் தந்தையின் கையை இழுத்துக்கொண்டு செல்ல, முத்துவேல் காலில் விழுந்து வணங்க ஹர்ஷத், ரூபாவும் ராதிகாவை பின்பற்ற, ராதிகாவை தூக்கிய முத்துவேல், 

“சில சமயம் வாழ்க்கையிலே குழந்தைங்க கிட்ட இருந்து பெத்தவங்க கத்துக்க நிறைய இருக்கு, புரிஞ்சுக்கிட்டா சரி.” ஹர்ஷத் ரூபாவின் தந்தையிடம், 

“என்னை மன்னிச்சிடுங்க. நான் ரூபாவை உங்க சம்மதம் இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணது தப்புதான். ஏனோ அந்த நேரத்துல எங்களுக்கு காத்திருக்க தோணல. ஒவ்வொரு தடவையும் ராதிகாவை பார்க்கும்போது ரத்னாவை பாக்குற மாதிரி இருக்குன்னு ரூபா சொல்லுவா, ஆனா எனக்கு எங்க ரெண்டு பேரையும் கண்ணாடியில் பார்க்கும்போது உங்களோட முகம் மட்டும் தான் ஞாபகத்துக்கு வரும். 

மன்னிப்பு கேட்கிறதுக்கான சந்தர்ப்பம் இதுவரைக்கும் அமையல. அதான் கிடைச்ச சந்தர்ப்பத்துல மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” ஹர்ஷத் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கவும் ஏனோ அந்த சூழ்நிலை மிகவும் இருக்கமாக இருப்பதாக உணர்ந்த அஜீத், 

“அங்கிள், அப்பா, நீங்க வீட்டுக்கு வர்றதா சொன்னாங்க. வீட்ல போய் பேசிக்கலாம்.” என அனைவரையும் அழைக்க முத்துவேல் ராதிகாவை எடுத்துக்கொண்டு காரில் அமர்ந்துகொள்ள ரூபாவும் ஹர்ஷத்தும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அவர்களை பார்த்த அஜீத், 

“நீங்களும் எங்க வீட்டுக்கு வரலாம். நீங்க வரக்கூடாதுன்னு நினைத்திருந்தா உங்க பொண்ணை அங்கிள் தூக்கிகிட்டு போயிருக்க மாட்டார். வாங்க போகலாம்.”

ஸ்டெல்லாவை பிரபுவுடன் அனுப்பிவிட்டு முத்துவேலின் காரில் அஜீத்தும் ரத்னாவும் ஏறிக்கொள்ள மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். ஜஸ்வந்த்திற்கு நடப்பது எதுவும் பிடிக்காத போதும் அஜீத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்களுடன் சென்றான். அஜீத்தின் வீட்டிற்கு வந்ததும் பொதுவான நல விசாரிப்புக்கு பின் தன் பொறுமையை இழந்த ரத்னா, 

“இப்பவாவது சொல்லுங்க உங்க எல்லாருக்கும் எப்படி தெரியும்? நாம சொந்தமா? இதுவரைக்கும் நான் எப்படி உங்களை பார்க்காமல் இருந்தேன்?” ரத்னா வெளிப்படையாக கேட்ட கேள்வியே அனைவரும் மனதில் இருப்பதை அறிந்துகொண்ட கிருஷ்ணசந்திரன் தங்களுக்கு எவ்வாறு தெரியும் என்பதை கூற ஆரம்பித்தார்.

கிருஷ்ண சந்திரனும், முத்துவேலும் பள்ளிக்கால நெருங்கிய தோழர்கள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களும் கூட. பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் கிருஷ்ண சந்திரனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து விட வீட்டின் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தென்காசியில் சிறிய கடையில் வேலைக்கு சேர்ந்த அவர் படிப்படியாக முன்னேறி இன்று கோவையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வேலைவாய்ப்பிற்காக இடம்பெயர்ந்த கிருஷ்ணசந்திரன் அதன் பிறகு தென்காசிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. முப்பது வருடங்களுக்குப் பின்பு தங்கவேலுவிற்கு பெண்பார்க்க வந்த இடத்திலேயே இருவரும் மீண்டும் சந்தித்தனர். இதுவரை அஜித் முத்துவேலுவை ஒருமுறை மட்டுமே சந்தித்து இருக்கிறான். ஹாஸ்டல் வாசலில் முத்துவேலுவை பார்த்த பின்பே அவர் ரத்னாவின் பெரியப்பா என்பதை அறிந்துகொண்டான். அனைவரும் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரத்னா அஜீத்திடம், 

“பாருடா இனி நீ எனக்கு சொந்தமா?” மகளின் பேச்சை கேட்ட பார்வதி, 

“என்ன பேச்சு இது ரத்னா? நீ வா போ-ன்னு மரியாதை இல்லாம அந்த தம்பிகிட்ட பேசுற, தம்பி உனக்கு மாமா பையன் ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு.”

“அம்மா, யாராவது சின்ன பையனை அத்தான்னு சொல்லுவாங்களா?”

“சின்ன பையனா?”

“ஆமாம்மா, என்னை விட 57 நாள் சின்னப்பையன்.” மைதிலி ஒரு சிரிப்புடன், 

“யாருமா உன்கிட்ட சொன்னா என் பையன் உனக்கு சின்ன பையன்னு?”

“பர்த்டே கேட்கும்போது அஜீத் தான் சொன்னான்.” 

“அவன் உனக்கு 57 நாள் சின்ன பையன் கிடையாது. ரெண்டு வருஷம் பெரிய பையன். அவனை ஸ்கூல் மாத்தி சேர்க்கும்போது மறுபடியும் எல்கேஜி யுகேஜிலிருந்து திரும்பவும் படிச்சான். அதனால ரெண்டு வருஷம் பிந்தி படிக்கிறான். அர்ச்சனா ஒரு வருஷம் பிந்தி படிக்கிறா. அர்ச்சனாவுக்கு தான் உன்னோட வயசு.” என மைதிலி கூறியதை கேட்ட பின் அஜீத்திடம், 

“நீ… நீங்க எதுக்கு என்கிட்ட சொல்லல? சொல்லிருந்தா மரியாதை கொடுத்து பேசி இருப்பேன் தானே.”

“இப்போ எதுக்கு உன் முகம் வாடி போயிடுச்சு? அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம ரெண்டு பேரும் ஒரே கிளாஸ்ல தான் படிக்கிறோம். இதுல நீ காலேஜ்க்குள்ள வச்சு என்ன அத்தான், மாமா, மச்சான் அப்படின்னு உறவு சொல்லி கூப்பிட்டா மொத்த காலேஜும் ஓட்டி தள்ளிடுவாங்க. குறைஞ்சபட்சம் காலேஜ் முடியவரை என்னை பேர் சொல்லியே கூப்பிடு.”

“அதெல்லாம் என்னால முடியாது. நானெல்லாம் வீட்ல என்ன சொல்றாங்களோ அது தான் கேட்பேன். இன்னைல இருந்து உங்களை அத்தான் அத்தான் அத்தான் அத்தான் அத்தான் அப்படிதான் கூப்பிடுவேன்.”

“வேண்டாம்.”

“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.” அதன் பிறகு அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்க ஜஸ்வந்த் மட்டும் ஏனோ நெருப்பின் மீது இருப்பது போல உணர்ந்தான். 

முத்துவேல் ரூபாவிடமும் ஹர்ஷத்திடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்க அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இரவு உணவிற்கு பின்பு அனைவரையும் அங்கே தங்கி விட்டு செல்லுமாறு கிருஷ்ண சந்திரன் கூற அனைவரும் சம்மதித்தனர். ஆனால் ஜஸ்வந்த் மட்டும் அங்கிருந்து வெளியேறினால் போதும் என்பதுபோல் ஹோட்டல் சென்றுவிட்டான். ஹர்ஷத் அதை கவனித்தாலும் ஏனோ ஜஸ்வந்த்தை தடுக்க தோன்றவில்லை. 

அனைவரும் உறங்க சென்றவுடன் முத்துவேல் கிருஷ்ணனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, 

“கிருஷ்ணா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல நேரடியாவே கேக்கிறேன், உன் மூத்த பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி தர உனக்கு சம்மதமா?” 

“எனக்கு இதுல முழு சம்மதம். ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது நம்ம பசங்க அவங்க கிட்ட கேட்டு இதபத்தி மேற்கொண்டு பேசலாம். அப்புறம் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும், உனக்கு இப்போ ரூபா மேலயும் அவளுடைய வீட்டுக்காரர் மேலயும் ஏதாவது கோபம் இருக்கா?” 

“முன்ன இருந்த கோபம் இப்ப இல்ல ஆனா வருத்தம் இருக்கு. அது போகுமா என்னனு எனக்கு தெரியல.”

“சரி அதை விடு உனக்கு ரூபா மேல கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும் அது நியாயமானதுதான். ஆனால் அதுக்கான தண்டனையை எதுக்காக ரத்னாவுக்கு கொடுக்கிற?”

“நான் ரத்னாவுக்கு தண்டனை கொடுக்கிறேனா? உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு என்னோட பொண்ணு ரூபாவை விட ரத்னா தான் ரொம்ப பிடிக்கும். அவ வருத்தப்படுவா என்கிற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் ரூபாவை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்க நான் தயங்கினேன். ரத்னா சின்னதா வருத்தப்பட்டா கூட என்னால தாங்கிக்க முடியாது. அப்படி இருக்கும்போது நான் எதுக்காக ரத்னாவுக்கு தண்டனை கொடுக்கப் போறேன்?”

“நீ தண்டனை தான் கொடுத்துக்கிட்டு இருக்க, அதை இங்கே இருக்கிற எல்லாரையும் கேட்டாலும் சொல்லுவாங்க.” 

“நான் அப்படி என்ன தண்டனை அவளுக்கு கொடுத்தேன்?”

“இப்போ ரத்னா இருக்கிற தோற்றமே அவளுக்கான தண்டனைதான். என்னோட பொண்ணுகிட்ட நான் கண்டிப்பா இருப்பேன். ஆனால் அவளுடைய தோற்றத்தில் ஒரு இளவரசியா இருக்க வச்சிருக்கேன். என்னை விட வசதி உங்ககிட்ட இருக்கு அப்படி இருந்தும் ரத்னாவை பார்க்கிற யாரும் அவளை கஷ்டப்படுற வீட்டு பொண்ணுன்னு தான் சொல்லுவாங்க. நம்ம மேல ஒருத்தருக்கு கோபம் வரலாம், ஆனால் வெறுப்பு வந்துவிடக்கூடாது. ரத்னா உன்னை வெறுத்துடாம பாத்துக்கோ.” என்று கூறி விட்டு கீழே சென்று விட, 

நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்த முத்துவேல் ஒரு முடிவுடனே உறங்க சென்றார். அடுத்த நாள் காலை உணவிற்கு பின் இரு வீட்டாரும் தங்கள் பிள்ளை சம்மதம் கேட்க, அடக்கமான அழகுடன் இருக்கும் ஆர்த்தியை மறுப்பதற்கு எந்த காரணமும் இன்றி சம்மதம் கூற, அதே போன்று வசதி படிப்பு அனைத்திலும் தங்களை விட ஒரு படி உயர்ந்திருக்கும் தங்கவேலுவை ஆர்த்திக்கு பிடித்திருக்கவே செய்தது. மேற்கொண்டு பேசுவதற்கு முன் ஜாதகம் பார்க்க பெரியவர்கள் கிளம்ப, சிறியவர்கள் ஷாப்பிங் செல்ல முடிவு செய்து கிளம்பும் முன் ரத்னாவிடம் வந்த முத்துவேல், 

“ரத்னா என்னை மன்னிச்சிடுமா.”

“ஐயோ பெரியப்பா நீங்க எதுக்காக என்கிட்ட மன்னிப்பு கேக்கிறீங்க?”

“ரூபா மேல இருந்த கோபத்தில உங்களை நான் கஷ்டப்படுத்திட்டேன். நான் கொடுமைகாரனா மாறிட்டேன். உங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை கூட கிடைக்க விடாம செய்திட்டேன்.”

“பெரியப்பா இப்படி எல்லாம் பேசுனா எனக்கு கோபம் வரும். கோபம் வந்தா நான் உங்க கைய கடிச்சு வைச்சுடுவேன்.”

“நீங்க கடிச்சா கூட எனக்கு சந்தோஷம் தான்.”

“கடிக்கலாம் ஆனா எனக்கு என் பெரியப்பா மேல எப்பவும் கோபம் வராதே.”

“பெரியப்பா மேல உங்களுக்கு கோபம் இல்லன்னா இன்னைக்கு ஷாப்பிங் போயிட்டு வரும் போது நிறைய டிரஸ் வாங்கிக்கணும். அது எல்லாம் ரொம்ப அழகா இருக்கணும். நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்களோ, பெரியப்பா அவ்வளவு சந்தோஷப்படுவேன்.”

“சரி வாங்கிக்கிறேன் போதுமா.”

ஷாப்பிங் மால் சென்றதும் வருங்கால தம்பதிகள் தனியே சென்றுவிட, ஹர்ஷத்தும் ரூபாவும் ஜஸ்வந்தை காண ஹோட்டல் சென்றுவிட, அஜீத், ரத்னா, அர்சனா, ராதிகா மட்டுமே மால் முழுவதையும் சுற்றி வந்தனர். ராதிகா குழந்தைகள் விளையாடும் இடத்தை விட்டு வர மறுக்க, 

“அண்ணா நான் பாப்பாவை பாத்துக்கிறேன். நீங்க ரத்னாவை கூட்டிட்டு போய் அவங்களுக்கு வாங்கி கொடுங்க.”

“சரி கையில போன் இருக்குதானே, எதாவதுன்னா போன் பண்ணு.”

அந்த பிரபல துணிகடையை சுற்றி வந்த ரத்னா எதையும் தேர்ந்தெடுக்காமல் இருக்க அஜீத், 

“ரத்னா நாம இங்க வந்தது உனக்கு டிரஸ் வாங்க, சுத்தி பார்க்க இல்ல.”

“எனக்கு டிரஸ் செலக்ட் பண்ண தெரியாது அஜீத். எப்பவும் அக்கா இல்லன்னா, அம்மா தான் எனக்கு டிரஸ் செலக்ட் பண்ணுவாங்க.”

“உனக்கு பிரச்சனை இல்லன்னா நான் செலக்ட் பண்ணவா?”

“ஓகே, ஆனா டிரஸ் ரொம்ப அழகா இருக்கணும்.” என தன் பெரியப்பா கூறியதை கூற, 

“அவ்வளவு தான, உன் பெரியப்பாவை மகிழ்ச்சி கடலில் மூழ்க வச்சுடலாம்.”

அதன் பிறகு பளீச் என்ற நிறத்தில் பல சுடிதாரும், ஜீன்ஸ் குர்தாவும் எடுத்து அதை ரத்னாவின் அளவிற்கு ஆல்டர் செய்ய கொடுத்துவிட்டு, கல்லூரிக்கு அணிவது போல காதனி, வளையல், செருப்பு என பேன்சி பொருள்கள் எல்லாவற்றையும் வாங்கி முடித்தவுடன், ரத்னாவை அங்கிருந்த அழகு நிலையத்திற்கு அழைத்து சென்ற அஜீத் புதிதாக எடுத்த சிலவற்றை கொடுத்து அனுப்பிவிட்டு தங்கையை அழைத்து வர, தங்கவேல், ஆர்த்தியும் பேசி முடித்துவிட்டு வர, ஜஸ்வந்தை அழைத்துக்கொண்டு ரூபாவும் ஹர்ஷத்தும் வர, அதற்குள் ஜாதகம் பார்க்க சென்ற மற்றவர்களும் மாலிற்கு வந்துவிட, அனைவரும் ரத்னாவின் அழகை கண்டு வியந்து போயினர்.

ரத்னாவின் இந்த மாற்றத்தை பார்த்த அனைவரும் வியந்திருக்க, ஜஸ்வந்திற்கு மட்டும் இந்த மாற்றம் அஜீத் மூலம் நடந்தது துளியும் பிடிக்கவில்லை. மேலும் இரு விழிகள் ரத்னாவை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை. அறிந்திருந்தால் பின்னால் ஏற்படப்போகும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top